அண்மையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசிய அனைத்துலகக் கடப்பிதழ்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் மலேசியர்கள், எதிர்கொண்டு வரும் சிக்கல்களைத் தொடர்ந்து, அதன் அதிகபட்ச செல்லுபடியாகும் காலத்தை 10 ஆண்டுகளாக நிர்ணயித்து குடிநுழைவுத் துறை உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய கடப்பிதழ் தொடர்பான நடைமுறைகளைச் சீராக்குவதையும், அனைத்துலகப் பயணங்களின் போது ஏற்படும் குழப்பங்களைத் தவிர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் சிக்கலை எதிர்கொள்ளும் மலேசியப் பயணிகளுக்கு உதவும் வகையில் விமான நிறுவனங்களுக்குத் குடிநுழைவுத் துறை சார்பில் அறிவிப்புக் கடிதங்களும் அனுப்பப்படவுள்ளன.
மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை, 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட கடப்பிதழ்கள் வழங்குவதையும் நிறுத்தி வைப்பதாக குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது.
அதேவேளையில், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட தற்போதைய அனைத்துலக கடப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு, அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் புதிய கடப்பிதழ்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடப்பிதழ் மாற்றீடு செய்வதில் பாதிக்கப்பட்ட அனைத்துலகக் கடப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.








