விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள், பாதுகாப்புச் சோதனைகளை நிறைவு செய்ய, 2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வர வேண்டும் என சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியாங் கிங் சிங் தெரிவித்த கருத்துக்கு தேசிய விமானப் பணியாளர்கள் சங்கமான னுஃபம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடுமையான பணிச்சுமை மற்றும் சோர்வுக்கு மத்தியில் பணியாற்றி வரும் விமானப் பணியாளர்களுக்கு இந்த நடைமுறை கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என னுஃபம் தெரிவித்துள்ளது.
அதிகாலையில் பணிக்கு வருதல், இரவு நேரங்களில் பணியை நிறைவு செய்தல், நீண்ட நேரம் மற்றும் ஒழுங்கற்ற பணி அட்டவணை, தூக்கத்தில் ஏற்படும் இடையூறுகள் உள்ளிட்ட பல்வேறு பணி சுமைகளை விமானப் பணியாளர்கள் எதிர்கொண்டு வருவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சோர்வு என்பது ஊழியர்களின் நலன் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல, விமானப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய பிரச்சினையும் என வலியுறுத்தியுள்ள னுஃபம், கூடுதலாக இரண்டு மணி நேரம் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான செலவை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் கவலை தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட விமான நிறுவனமோ? அரசாங்கமோ? விமானப் பணியாளர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்குவதை அமைச்சர் உறுதி செய்வாரா? என்றும் னுஃபம் கேள்வி எழுப்பியுள்ளது.








