கடந்த சனிக்கிழமை, சுங்கைப்பட்டாணி அருகிலுள்ள பந்தாய் மெர்டேக்கா படகோட்டும் பயிற்சியின் போது, நீரில் மூழ்கி உயிரிழந்த பெர்லிஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவரின் குடும்பத்தினர், இத்தகைய துயர சம்பவம் மீண்டும் நடக்காதிருக்க, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என மரணமடைந்த மாணவர் ஜோயி லிங் லின் சிங் உறவினரான 46 வயதான கீ சிங் சிங் தெரிவித்துள்ளார்.
படகோட்டும் செயல்பாடுகளுக்கான நடைமுறை விதிமுறைகள் பற்றிய விவரங்களும், அந்த அறிக்கையில் தெளிவாக இருக்க வேண்டும் என்றும், அந்த இடம் இத்தகைய செயல்பாடுகளுக்கு பொருத்தமானதா? என்பதை அறிய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வெளிப்புற செயல்பாடுகள் தொடர்பான பாடத்திட்டத்தை கல்வி அமைச்சு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் நேற்று திங்கட்கிழமை இரவு சுல்தானா பாஹியா மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாலை சுமார் 7.30 மணியளவில், பந்தாய் மெர்டேக்கா பகுதியில் படகோட்டத்தில் ஈடுபட்ட போது, 21 வயதுடைய கிறிஸ்டோபர் லிங் ஜியா சியாங் மற்றும் 20 வயதுடைய ஜோயி லிங் லின் சியாங் ஆகிய இருவரும், நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








