பெட்டாலிங் ஜெயா, ஜூன் 20-
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அனைத்துலக ஆய்வுகளில் மலேசியப் பல்கலைக்கழகங்கள் தர வரிசையில் உயர்ந்துள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறக்கூடிய பட்டதாரிகள், போதுமான மென்திறன்களை கொண்டிருக்கவில்லை என்றால் தர வரிசை உயர்வு என்பது அர்த்தமற்றதாகி விடும் என்று மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனமான MEF, நினைவுறுத்தியுள்ளது.
உள்ளூர் பட்டதாரிகளுக்கும், அவர்கள் சார்ந்த தொழில்துறை வாய்ப்புகளுக்கும் பொருத்தமற்ற சூழலே காணப்படுகிறது. அவர்கள் போதுமான அடிப்படை மென்திறன்களை கொண்டிருக்கவில்லை என்று அந்த சம்மேளனம் கூறுகிறது. .
தர வரிசையில் உயர்ந்திருப்பதாக அறிவிக்கப்படும் உள்ளூர் பல்கலைக்கழகங்களை சேர்ந்த பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்படுகின்றன.
அத்தகைய பட்டதாரிகளை பணிக்கு அமர்த்தப்படுவதற்கு முன், அவர்கள் செயலாற்ற வேண்டிய பல்வேறு கடமைகள், ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்புகள் ஆகியவற்றுக்கு அவர்கள் பொறுத்தமான மென்திறன்களை கொண்டிருக்கிறார்களா? என்பதுதான் பெரும்பாலான நிறுவனங்களின் எதிர்பார்ப்பாகும் என்று அந்த சம்மேளனம் கூறுகிறது.
2021 ஆம் ஆண்டு முதலாளிமார்கள் சம்மேள சம்பள ஆய்வறிக்கையின்படி, மூன்றில் ஒரு பகுதி நிறுவனங்கள், உயர்திறன் கொண்ட குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதற்கு பல்வேறு கடமைகளை ஆக்கப்பூர்வமாக செய்யக்கூடிய புதிய பட்டதாரிகளை எதிர்பார்க்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது
அதேவேளையில் 29 விழுக்காடு நிறுவனங்கள் பொறுப்புகளை ஏற்று, திறம்பட செயலாற்றக்கூடிய பட்டதாரிகளை எதிர்பார்க்கின்றன. 28.5 நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் தாங்கள் வளர்த்துக்கொண்ட திறன்களுக்கு ஏற்ப பணியை திறம்பட கையாளக்கூடிய பட்டதாரிகளை எதிர்பார்க்கின்றன என்று முதலாளிமார்கள் சம்மேளனத்தின் தலைவர் சையத் ஹுசைன் சையத் ஹுஸ்மான் தெரிவித்துள்ளார்.
சுருங்கச் சொன்னால், தர வரிசையில் உயர்ந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள மலேசிய பல்கலைக்கழகங்களால் உருவாக்கக்கூடிய பட்டதாரிகளிடம் போதுமான திறன்கள் இல்லையென்றால் தர வரிசை உயர்வு என்பது அர்த்தமற்றதாகி விடும் என்று சையத் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.








