கோலாலம்பூர், பிப்ரவரி.08-
கெடா மாநில மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக 'சுல்தான் கெடா அறக்கட்டளை' எனும் புதிய நிதித் திட்டத்தை சுல்தான் சாலேஹுடின் சுல்தான் பாட்லிஷா இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். கல்வி, சமூக நலம், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விலங்கு பாதுகாப்பு, விளையாட்டு ஆகிய ஆறு முக்கியத் துறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறக்கட்டளை செயல்படும் என அதன் தலைவரான கெடா இளவரசர் தெங்கு சராஃபுடின் பாட்லிஷா சுல்தான் சலேஹுடின் தெரிவித்தார்.
2025-ஆம் ஆண்டின் இறுதி வரை இந்த நிதியத்தின் மூலம் சுமார் 2.04 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி மாநிலம் முழுவதிலும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 2025, 2026-ஆம் ஆண்டுகளுக்கான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களும் நிறுவனங்களும் தாராளமாகப் பங்களிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் தகுதியுள்ள நபர்களுக்குச் சரியான முறையில் நிதி சென்றடைவதை உறுதிச் செய்வதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என தெங்கு சராஃபுடின் மேலும் தெரிவித்தார்.








