ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆறாம் படிவம் மாணவன் தி. நவீன் கொலை வழக்கில், அந்த மாணவனை சித்ரவதை செய்து,மிக கொடூரமாக அடித்துக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து இந்திய இளைஞர்களை பினாங்கு, ஜார்ஜ் டவுன் உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
இந்த கொலை வழக்கில் ஐவரும் குற்றவாளிகள் அல்ல என்றும், அவர்கள் இக்கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதாகவும் உயர் நீதிமன்ற நீதிபதி ரட்சி ஹமிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார். 30 வயது எஸ். கோபிநாத், 22 வயது ஜே. ராகசுதன், 22 வயது எஸ். கோகுலன் மற்றும் பதின்ம வயதுடைய மேலும் இரண்டு இந்திய இளைஞர்கள், 18 வயதுடைய நவீனை கொலை செய்ததாக தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.
இந்த ஐந்து இந்திய இளைஞர்களும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுன் 9 ஆம் தேதி நள்ளிரவு, பினங்கு, புக்கிட் குளுகோரில் கர்ப்பால் சிங் லேர்னிங் சென்டர்லிலும், ஜாலான் பூங்ஙா ராயா, பூங்காவிலும் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தலைக்கவசத்தினால் தலையிலேயே அடிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவன் நவீன், மூளைச் சாவுக்கு இலக்காகி சுயநினைவு திரும்பாமலேயே பினாங்கு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நவீன் படுகொலை தொடர்பில் நீதி வேண்டும் என்று பல்வேறு சமூக அமைப்புகள் போராடிய நிலையில் அவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து இந்திய இளைஞர்களையும் உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.








