கோலாலம்பூர், மார்ச்.10-
கேஎல்ஐஏ விமான நிலையத்தின் 3-ஆவது ஓடுபாதையின் மேம்பாட்டுப் பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பாகவே நிறைவடைந்ததால், 7 நாட்களுக்கு முன்பே முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24 முதல் 26-ஆம் தேதி வரையில், ஓடுபாதையானது முழுமையாக மூடப்பட்ட நிலையில், இந்த மேம்பாட்டு பணிகளானது, தொடங்கப்பட்டதாக கேஎல்ஐஏ நிர்வாகம் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் மீதமுள்ள பணிகள் தொடர்ந்த போது, குறைக்கப்பட்ட அமைப்பின் மூலமாக விமானப் புறப்பாடுகள் செயல்படுத்தப்பட்டதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் மார்ச் 17 ஆம் தேதி, மீண்டும் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஓடுபாதையானது, 7 நாட்களுக்கு முன்பே முழுமையாகச் செயல்படத் தொடங்கி விட்டதாகவும் கேஎல்ஐஏ நிர்வாகம் அறிவித்துள்ளது.








