கோலாலம்பூர், ஆகஸ்ட்.12-
நாட்டில் நிலவும் தாதியர்கள் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு இந்தோனேசியாவிலிருந்து தாதியர்கள் தருவிப்பது தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னதாக, பொது நலன் சார்ந்த அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
குறிப்பாக, சுகாதார அமைச்சின் கீழ் தற்போது பணியாற்றி வரும் ஊழியர்களின் நலன், முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
தவிர நாட்டின் சுகாதாரச் சேவையளிப்பு முறையின் ஆக்கப்பூர்வமான செயல்பாடும் கருத்தில் கொள்ளப்படும் என்று டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
இந்தோனேசியாவிலிருந்து தாதியர்கள் தருவிக்கப்படுதற்கு முன்னதாக விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று எஸ்பிஏ எனப்படும் பொதுச் சேவை ஆணையம் அறிவித்திருப்பதை சுகாதார அமைச்சர் என்ற முறையில் தாம் வரவேற்பதாக டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் குறிப்பிட்டார்.








