உணவகங்களில் புகைபிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறிய சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 23-ஆம் தேதி, ரவாங் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் நபர் ஒருவர் புகைபிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்திய சுகாதார அமைச்சு, அந்த நபர் கோம்பாக் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு அரசு ஊழியர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, 'பொது சுகாதாரத்திற்கான புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024'-ன் கீழ் அந்த அதிகாரிக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.
சட்டம் அனைவருக்கும் சமமானது என்றும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே சட்டத்தை மீறுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.








