மதத்தைக் காரணம் காட்டி தாம் இந்திய முஸ்லிம் சமூகத்தினரை ஓரங்கட்டி வருவதாகச் சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைப் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் கடுமையாகச் சாடியுள்ளார். இன்று ஈப்போவில் இந்திய முஸ்லிம் சமூக இயக்கங்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய சிறப்புச் சந்திப்பிற்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
தாம் நான் ஒரு இந்துவாக இருந்தாலும், இந்திய முஸ்லிம் மக்களுக்கு என்றும் தோழனாகவே இருந்து வருவதாக டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார். அவர்கள் மதத்தால் வேறுபட்டிருந்தாலும், இனத்தால் இந்தியர்கள் என்ற அடிப்படையில் வாழ்பவர்கள். எனவே, பேராக் மாநில இந்திய விவகாரங்களுக்கான தலைவர் என்ற முறையில் அவர்களின் சமூக நலம் மற்றும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு நிச்சயம் உதவிகள் வழங்கப்படும்" என்று டத்தோ சிவநேசன் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட கெபிமா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் இளைஞர் மகளிர் இயக்கத்தின் ஆலோசகர் முகமட் காதிர் கூறுகையில் இந்திய முஸ்லிம்கள் பயன்பெறும் வகையில் டத்தோ சிவநேசனிடம் 6 கோரிக்கைகளை முன்வைத்ததாக குறிப்பிட்டார்.
பிரிம் எனப்படும் பேரா மாநில இந்திய முஸ்லிம் சங்கத் தலைவர் முகமது அரிப் அலியா கூறுகையில் தமிழ் சமுதாயத்திற்காக தாங்களும் பல வகையான சேவைகளை செய்து வருவதாகவும், டத்தோ சிவநேசன் சார்ந்த துறையின் மூலம் பேரா மாநில இந்திய முஸ்லிம்கள் எந்தெந்த வகையில் பயன்பெற முடியும் என்பதை கண்டறியும் நோக்கத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக குறிப்பிட்டார்.
பல இன மக்கள் வாழும் இந்நாட்டில், நடப்பு அரசாங்கம் எவ்வித இனவேறுபாடுமின்றி உதவிகளைச் செய்து வருவதாகவும் டத்தோ சிவநேசன் வலியுறுத்தியிருப்பதாக சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.













