கூச்சிங், ஜனவரி.23-
கடந்த வாரம், ஶ்ரீ அமானில் உள்ள வீடு ஒன்றில், தலைமையாசிரியர் ஒருவரும், தாதியரான அவரின் மனைவியும் கொலையுண்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பான விசாரணையை, சரவாக் மாநில போலீசார் பெருமளவில் நிறைவு செய்துள்ளனர்.
கொலை நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஆயதத்தில், வெளிநபர்களின் மரபணுக்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட இருவரின் மரபணுக்கள் மட்டுமே காணப்பட்டதாகவும் அம்மாநில போலீஸ் தலைவர் கமிஷ்னர் டத்தோ முஹமட் ஸைனால் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், வெளிநபர்கள் யாரும் வீட்டிற்குள் புகுந்ததற்கான தடயங்களோ அல்லது கொள்ளையடிக்கப்பட்டதற்கான ஆதாரங்களோ கண்டறியப்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
லுபோக் அந்து மாவட்டத்தில் உள்ள SK Sbangki தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வந்த 45 வயது Andy Roy Junran-யும், ஶ்ரீ அமான் மருத்துவமனையில் தாதியராகப் பணியாற்றி வந்த அவரது 44 வயது மனைவி Angelin Kibin-னும், வீட்டின் படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








