நேபாலில், எவரெஸ்ட் சிகரத்தின் எவரஸ்ட் பேஸ் கேம்ப் பகுதியில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட மலேசிய குழுவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ராவில் ஓர் அதிகாரியாக பணியாற்றிய 38 வயது கே. பார்த்திபன் என்பவரே இச்சம்பத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.
விஸ்மா புத்ரா அதிகாரி பார்த்தீபனின் திடீர் மறைவைத் தொடர்ந்து மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இதர ஒன்பது மலேசியர்கள் தங்களின் பயணத்தை கைவிட்டனர்.
எவரஸ்ட் பேஸ் கேம்ப் பகுதியை அடைவதற்கு சிறிது தூரமே எஞ்சியிருந்த வேளையில் பார்த்தீபன் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மலையேறும் நடவடிக்கையின் போது அவர் சுவாசக் கோளாறுக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
எவரஸ்ட் பேஸ் கேம்ப் என்பது கடல் மட்டத்திலிருந்து 5,364 மீட்டர் உயரத்தில் உள்ளது. இக்குழுவினர் மலையேறும் நடவடிக்கைக்காக கடந்த அக்டேபர் 21 ஆம் தேதி நேபால் தலைநகர் காட்மண்டுக்கு புறப்பட்டனர்.
14 நாட்களை கொண்ட இந்த மலையேறும் நடவடிக்கையில் ஒன்பதாவது நாளான இன்று காலையில் இக்குழுவினர் கொராக் ஷெப் என்ற பகுதியில் மலையேறிக் கொண்டு இருந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
பார்த்தீபனின் உடலை கொராக் ஷெப் பகுதியிலிருந்து காட்மண்டுவிற்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரின் உடலை மலேசியாவிற்கு கொண்டு வருவதில் விஸ்மா புத்ரா உரிய நடவடிக்கையை எடுத்துள்ளதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








