சமூக ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் 60 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அதேவேளையில், பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலரும், ஒரே குடும்பமாகத் திரண்டு வந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், டத்தோ சிவகுமார், சிறுவர்களுக்கு உணவுகளைப் பரிமாறியதோடு, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார்.
மேலும், சிறுவர்களுக்கு அன்பளிப்புக் கூடைகளும், பெருநாள் பணமான 'துவிட் ராயா' மற்றும் புனித குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அங்கிருந்த குழந்தைகளுடன் அவர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜோகூரைச் சேர்ந்த டத்தோ முகமது அலி, இந்நிகழ்வானது மலேசியாவின் ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், டத்தோ சிவக்குமாருக்கு நன்றி தெரிவித்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ சிவகுமார், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், இப்தார் நிகழ்வை நடத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். மலேசியா போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில், ஜாதி மத பேதமின்றி ஒருவரையொருவர் நேசித்து ஒற்றுமையாக வாழ்வதே உண்மையான அறம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளையும் டத்தோ சிவக்குமார் பகிர்ந்து கொண்டார்.












