பினாங்கில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில், தம்பதியர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 1.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பல வாரங்களாக சேகரிக்கப்பட்ட உளவுத்தகவலின் அடிப்படையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், 22 முதல் 28 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக மாநில போலீஸ் தலைவர் அசீசி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை நண்பகலில் கார் நிறுத்துமிடம் ஒன்றில் நடத்தப்பட்ட முதல் சோதனையில், நபர் ஒருவரைக் கைது செய்த போலீசார், அவரது வாகத்திலிருந்து 3.02 கிலோ எடையுடைய 120 MDMA போதைப்பொருள் பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.
அதே இடத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில், தம்பதியர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களது மோட்டார் சைக்கிளைச் சோதனை செய்தபோது, 2.21 கிலோ எடையுடைய 119 MDMA போதைப் பொருள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அசீசி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்றாவது சோதனையானது, செபராங் பிறை உத்தாரா பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நடத்தப்பட்டதாகவும், MDMA, ketamine உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








