புலாவ் தெங்கோல் கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாயமானதாக நம்பப்படும் முக்குளிப்பாளர் ஒருவரைத் தேடும் நடவடிக்கையானது 94.93 சதுர கடல் மைல்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
66 வயதான டாம் பெங் ஹூங் என்பவரை கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை நான்காவது நாளாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையில் பல முகமைகளும், தனியார் தரப்புகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான MMEA தெரிவித்துள்ளது.
மேற்பரப்பு தேடுதல் பணிகள் பகாங் மாநில MMEA-வின் ‘பாட் பெர்காசா 45’ கப்பலின் உதவியுடனும், திரெங்கானு மாநில MMEA-வின் ‘கே.எம் ரெடாங்’ கப்பலின் உதவியுடனும் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், தீவில் செயல்பட்டு வரும் மூன்று முக்குளிப்போர் மையங்கள், சம்பவம் நடந்த பகுதியில், நீருக்கடியில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக MMEA வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.








