கோலாலம்பூர், பிப்ரவரி.14-
கெப்போங்கில் உள்ள ஒரு வீட்டில், ஒரு தம்பதியினர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் உடம்பில் 89 கத்திக் குத்துக் காயங்கள் இருப்பது சவப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை கெப்போங், எஸ்பிகே டாமான்சாராவில் நடந்த இச்சம்பவத்தில், தனது கணவரால் அப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
கோலாலம்பூர் மருத்துவமனையில், நேற்று நடந்த சவப் பரிசோதனையில், அப்பெண்ணின் உடம்பில் 89 இடங்களில் வெட்டுக் காயங்களும், கணவரின் உடம்பில் 10 வெட்டுக் காயங்களும் இருந்ததாக கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சவப் பரிசோதனைக்குப் பிறகு, அப்பெண்ணின் உறவினர்கள், அவரது சடலத்தை இறுதிச் சடங்கிற்காகப் பெற்றுக் கொண்டதாகவும் ஃபாடில் மார்சுஸ் குறிப்பிட்டுள்ளார்.








