Sep 2, 2026
Thisaigal NewsYouTube
புனிதப் பயணத்தில் இறைவனை நாடிய 26 மலேசியர்கள்… மரபணு சோதனைக்கு தயாராகும் குடும்பங்கள்
தற்போதைய செய்திகள்

புனிதப் பயணத்தில் இறைவனை நாடிய 26 மலேசியர்கள்… மரபணு சோதனைக்கு தயாராகும் குடும்பங்கள்

Share:

நேபாளில் ஏற்பட்ட பேரிடரைத் தொடர்ந்து காணாமல் போன மலேசியர்களில் 26 பேர், மலேசிய சுற்றுலா நிறுவனமான ஸ்பெக்ட்ரம் ஏற்பாடு செய்த பயணக் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

“ஒரு புனிதப் பயணத்தைத் தொடங்குகிறோம் என்ற நம்பிக்கையில்…

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கையெடுத்து கும்பிட்டு விடைபெற்ற 26 மலேசியர்கள்… அன்று அவர்கள் அறிந்திருக்கவில்லை…

அந்தப் பயணம் தங்கள் குடும்பங்களுக்கு இப்படியொரு பெரும் காத்திருப்பை ஏற்படுத்தும் என்று.”

காட்மண்டுவைச் சென்றடைந்த அவர்கள், கைலாச யாத்திரையைத் தொடங்குவதற்கு முன்பாக இறைவனை நாடியுள்ளனர். ஆகஸ்ட் 25ஆம் தேதி, சிவபெருமான் அருள்பாலிக்கும் பேராலயமாகப் போற்றப்படும் பசுபதிநாதர் கோவிலுக்குச் சென்ற அவர்கள், அங்கு இறைவனை மனமுருகி வழிபட்டு, தங்களது புனிதப் பயணம் எந்தவித இடையூறும் இன்றி பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற வேண்டும் என பிரார்த்தனை செய்துள்ளனர்.

மறுநாள், ஆகஸ்ட் 26ஆம் தேதி, காசியின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் கால பைரவர் அருள்பாலிக்கும் புனிதத் திருத்தலமான காட்மண்டு, தர்பார் சதுக்கத்தில் உள்ள கால பைரவர் கோவிலுக்கும் அவர்கள் சென்று, இறைவனைப் பயபக்தியுடன் வழிபட்டுள்ளனர்.

இறைவனை முழுமையாக வழிபட்டு… நம்பிக்கையுடன் தங்களது பயணத்தைத் தொடர்ந்த அந்த 26 மலேசியர்களும், இன்று எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

அவர்களுடன் காணாமல் போன மேலும் பல மலேசியர்களைத் தேடும் பணி தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவைச் சேர்ந்த 46 வயதான வழக்கறிஞர் நவீன் பழனி குறித்தும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

நியூசிலாந்தில் வசிக்கும் அவரது சின்னம்மாள் மகள் சுனிதா கருணாகரனுடன் திசைகள் தொடர்பு கொண்ட போது, நவீன் மிகவும் அமைதியானவர் என்றும், தீவிர சிவபக்தரான அவர் ஏற்கனவே பலமுறை கைலாசப் பயணம் மேற்கொண்டவர் என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.

நவீனின் தந்தை பழனியும், சகோதரர் ரவீனும் DNA மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுனிதா தெரிவித்தார்.

அதேவேளையில், நவீனைத் தேடும் பணிக்கு தனது சகோதரர் ரவீனையும் நேபாளுக்கு அனுப்புவதற்கு தனது பெரியப்பா பழனி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மலேசியர்களைத் தேடும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களின் குடும்பங்களும் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பக்கம் தேடுதல் தொடர்கிறது… மறுபக்கம், மரபணு சோதனைக்குத் தயாராகும் அளவுக்கு குடும்பங்களின் கவலை தீவிரமடைந்துள்ளது.

Related News