மலேசிய ஊடக மன்றம் இதுவரை ஊடகங்கள் தொடர்பாக மொத்தம் ஏழு புகார்களைப் பெற்றுள்ளதாகத் தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார். இதில் ஐந்து புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு புகார்கள் தற்போது பரிசீலனையில் உள்ளன.
செய்தி துல்லியம், அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்துதல் மற்றும் சமூக ஒற்றுமையைப் பாதிக்கும் உள்ளடக்கம் போன்றவை இந்தப் புகார்களில் அடங்கும் துணை அமைச்சர் தியோ குறிப்பிட்டார்.
ஊடகத்துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தும் வகையில், பொதுமக்கள் மற்றும் அரசு இனி அனைத்துப் புகார்களையும் எம்.எம்.எம் (MMM) அதிகாரப்பூர்வ தளம் வழியாகவே சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, போலீஸ் துறை புகார்களை விசாரித்து சட்டத்துறையின் ஆலோசனைப்படி அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கும் என்று அவர் விளக்கமளித்தார். சட்ட அமலாக்கத்துறையினரும் ஊடகவியலாளர்களும் பரஸ்பர மரியாதையுடன் செயல்படுவது, செய்தியாளர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்ய வழிவகுக்கும் என்றும் துணை அமைச்சர் தியோ நீ சிங் குறிப்பிட்டார்.











