செந்தூல் - ஜிஞ்சாங் உத்தாரா, வணிக வளாகம் ஒன்றில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கலவரம் மற்றும் மோதலில் ஈடுபட்ட சம்பவத்தின் விசாரணை அறிக்கை, இன்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர்ரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 18 முதல் 51 வயதுக்குட்பட்ட 13 நபர்களின் தடுப்புக் காவல் காலம் வரும் ஜூன் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் பஸ்ரீ சாகோனி தெரிவித்துள்ளார்.
இந்த 13 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளைப் பரிந்துரைப்பதற்காக விசாரணை அறிக்கை தற்சமயம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேளையில், தலைமறைவாக உள்ள மேலும் ஐந்து நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அவசர அழைப்பைத் தொடர்ந்து, 12 மணி நேரத்திற்குள் கோலாலம்பூர் மற்றும் செந்தூல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்களிடம், ஆயுதங்களைப் பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபடுதல் மற்றும் கடுமையான காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.








