லங்காவி , செப்டம்பர் 06-
லங்காவியில் நடைபெறும் Tuba Cross Country நெடுந்தூர ஓட்டப் போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானிலிருந்து வந்ததாக கூறிய 29 பாகிஸ்தானியர்கள் கூற்றில், உண்மையில்லை என்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த 29 பேரும் லங்காவி அனைத்துலக விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டு, விரட்டப்பட்டனர்.
இது போன்ற அனைத்துலகப் போட்டியில் பங்கேற்பதற்கு மிகுந்த ஆர்முடையவர்கள் என்று சுயதம்பட்டம் அடித்துக்கொண்ட 29 பேரும் பாகிஸ்தானில் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களின் கூற்றில் எந்த அளவிற்கு உண்மை என்பதை சோதித்துப் பார்ப்பதற்கு அவர்களின் பயணப் பெட்டியை குடிநுழைவுத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது அதிர்ச்சிக்குள்ளாகினர்..
அந்த பயணப் பெட்டியில் ஓட்டப்போட்டியில் பங்கேற்பற்குரிய எந்தவொரு விளையாட்டு ஆடையோ அல்லது காலணியோ அல்லது வேறு எந்தவொரு விளையாட்டு உபகரணமோ எதுவும் இல்லை. மாறாக, வெறும் இரண்டு ஜோடி குர்தா ஆடைகளை மட்டுமே அவர்கள் தங்கள் பயணப் பெட்டியில் வைத்து இருந்தது தெரியவந்துள்ளது..
லங்காவி ஓட்டப் போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானிலிருந்து விமான டிக்கெட் உட்பட இதர ஏற்பாடுகளுக்கு 2 ஆயிரம் வெள்ளி வரை செலவிட்டு வந்ததாக அந்த 29 பேரும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அந்த நீர்விளையாட்டுப்போட்டியின் மொத்த வெகுமதியே 300 வெள்ளிதான். பங்கேற்பாளர் ஒவ்வாருக்கும் நுழைவுக்கட்டணமாக தலா 45 வெள்ளி விதிக்கப்படுகிறது.
அந்த 29 பாகிஸ்தானியர்களும் லங்காவில் உள்ள பட்ஜெட் ஹோட்டலில் தங்குவதற்கு முன் உறுதி செய்துள்ளனர். ஓட்டப் போட்டி முடிவடைந்ததும், ஒரு நாள் லங்காவியில் தங்கிவிட்டு துபாய்க்கு செல்ல அவர்கள் விமான டிக்கெட் எடுத்துள்ளனர்.
ஆனால், அந்த 29 பாகிஸ்தானியர்களும் துபாக்கு செல்ல நோக்கம் கொண்டிருக்கவில்லை. மாறாக, மலேசியாவை விட்டு வெளியேறும் திட்டமும் அவர்களுக்கு இல்லை என்பது தாங்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக கெடா மாநில குடிநுழைவு இலாகா இயக்குநர் முகமட் ரிட்சுவான் முகமட் ஜைன் தெரிவித்தார்.
லங்காவி ஓட்டப் போட்டியை ஏற்பாடு செய்த தரப்பினருடன் விசாரணை நடத்தியதில் இந்த ஓட்டப் போட்டியில் வெளிநாட்டுப் பங்கேற்பாளர்கள் உண்டு. ஆனால், பாகிஸ்தானியர்கள் யாரும் பங்கேற்வில்லை என்று தெரிவித்தது மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக முகமட் ரிட்சுவான் குறிப்பிட்டார்.
மலேசியாவிற்குள் நுழைவதற்கு பாகிஸ்தானியர்கள் லங்காவியை ஒரு தளமாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.








