மலேசியாவில் சில மின்-சிகரெட் விற்பனை கடைகளில் மிக அதிக தாக்கம் கொண்ட செயற்கை போதைப்பொருளான பியூரானில் பெண்டானில் மிக சாதாரணமாக விற்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிர்ச்சி தகவல், கடந்த ஏப்ரல் 13 முதல் 17 வரை நாடு முழுவதும் “ஒப்ஸ் வேப் 1.0” என்ற பெயரில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த நடவடிக்கையில் மொத்தம் 4.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையில், புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவான என்.சி.ஐ.டி சார்பில் 1,177 அதிகாரிகள் மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை, அது தொடர்பான அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமலாக்க நிறுவனங்களில் இருந்து 2,011 அதிகாரிகள் ஈடுபட்டனர்.
போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, மின்-சிகரெட் கடைகள் மூலம் சட்டவிரோத பொருட்கள் பரவுவதற்கான அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளது.
“பியூரானில் பெண்டானில்” என்பது “பெண்டானில்” என்ற சக்திவாய்ந்த போதைப்பொருளின் ஒரு மாற்றுவகை ஆகும்.
‘ஸோம்பி டிரக்’ என்றும் அழைக்கப்படும் இந்த வகை போதைப் பொருள் மிக ஆபத்தானது என என்.சி.ஐ.டி ஹுசைன் ஓமார் கான் எச்சரித்துள்ளார்.
இந்த போதைப்பொருள் மிகவும் விரைவாக அடிமையாக்கும் தன்மை கொண்டது. மிகச் சிறிய அளவில் பயன்படுத்தினால்கூட அதிகளவு ஓவர்டோஸ் அபாயத்தை ஏற்படுத்தி உயிருக்கு பேராபத்தாக மாறக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.








