கோலாலம்பூர், கெப்போங் பகுதியில் நிகழ்ந்த 44 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களில் மூளையாகச் செயல்பட்டதாக துணை போலீஸ் சூப்பரின்டெண்டென்ட் அந்தஸ்தைக் கொண்ட அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர் , புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையில் பணியாற்றியவர் ஆவார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, போலீஸ் உடை அணிந்த ஒரு கும்பல் வெளிநாட்டினரின் வீடுகளுக்குள் புகுந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. இக்கும்பலிடமிருந்து ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி போன்ற ஆடம்பர கார்கள், தங்கக் கட்டிகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் போலீஸ் அதிகாரி மற்றும் இரண்டு மெய்க்காப்பாளர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைமைச் அதிகாரி டத்தோ பாடில் மர்சூஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.








