சிலாங்கூர் மாநிலத்தின் அனுமதியற்ற வழிபாட்டுத் தலங்கள் குறித்து சமூக ஊடகங்களிலும் பொதுமக்களிடையேயும் நிலவி வரும் குழப்பங்களுக்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு விளக்கம் அளித்துள்ளார்.
சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜார்ஜ் குணராஜா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பாபாராய்டு, தற்போதுள்ள 1,169 என்ற புள்ளிவிவரம் அடிப்படையில் அனைத்துச் சமய வழிபாட்டுத் தலங்களையும் உள்ளடக்கியது என்றார். இதில் 688 இடங்கள் கோவில்களைக் குறிப்பவை. எனினும், பொதுப்பணித் துறையின் சாலை இருப்பு நிலங்களில் உள்ள கட்டமைப்புகளை ஆய்வு செய்து வருவதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"மலேசிய இந்து சங்கம் போன்ற அமைப்புகள், அறிக்கைகளை வெளியிடும் முன் தரவுகளை மாநில அரசிடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆதாரமற்ற தகவல்கள் பக்தர்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும்," என பாபாராய்டு கேட்டுக்கொண்டார்.
மேலும், சிறு காவல் தெய்வ வழிபாட்டு இடங்கள் குறித்து அரசு மனிதாபிமான அடிப்படையில் 'மறுவகைப்படுத்துதல்' பணிகளைச் செய்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
சட்டமன்றத்தில் துல்லியமான தரவுகளைச் சமர்ப்பிப்பது தமது கடமை எனத் தெரிவித்த பாபாராய்டு, அரசுத் துறையினரின் பணிகளைப் பாராட்டி, சமூக நல்லிணக்கத்தைக் காக்க ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்.








