கோலாலம்பூர், நவ.25-
மாணவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் இவ்வாண்டில் அதிகரித்துள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறுகிறது.
பகடிவதை சம்பவங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் மாணவர்கள் மத்தியில் குண்டர் கும்பல் அம்சங்களும் ஆக்கிரமித்துள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் மாணவர் மற்றும் சமூகவியல் பாதுகாப்பு குற்றத்தடுப்புப் பிரிவு இயக்குநர் டத்தோ வான் ஹசான் வான் அகமட் தெரிவித்தார்.
இவ்வாண்டில் ஜனவரி மாதத்திலிருந்து ஜுன் மாதம் வரையில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட 237 குற்றச்செயல்கள் பதிவாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பிறரை காயப்படுத்துதல், கலவரம் விளைவித்தல், குற்றவியல் மிரட்டல்கள், பணம் கேட்டு அச்சுறுத்தல், கைகலப்பு மற்றும் சேதம் விளைவித்தல் போன்ற குற்றச்செயல்கள் மாணவர்களுக்கு எதிராக பதிவாகியுள்ளது.
இதேகாலக்கட்டத்தில் 799 மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான டூத்தா சாசுவா கையேட்டை வெளியீடு செய்து உரையாற்றுகையில் டத்தோ வான் ஹசான் மேற்கண்டவாறு கூறினார்.








