கோலாலம்பூர், செப்டம்பர்.17-
அகீகா விழா ஒன்றிற்கு மன்னர் உடையணிந்து, மன்னர்கள் பயன்படுத்தும் கிரீடமும் அணிந்து வந்த டிக் டாக் பிரபலம் காவல்துறையினரின் விசாரணையில் சிக்கியுள்ளார்.
அவரது காணொளி டிக் டாக்கில் அண்மையில் பலரால் பகிரப்பட்டு வந்ததையடுத்து, அவருக்கு எதிராகப் புகார்கள் அளிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அரச சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 இன் பிரிவு 233 மற்றும் இன்னும் சில பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்படலாம் என கூட்டரசுப் பிரதேச குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், சமூக ஊடகங்கள், இணையத் தளங்கள் போன்றவற்றில், தேசத் துரோகம், அவமதிப்பு மற்றும் மக்களிடையே விரோதத்தைத் தூண்டுதுவது போலான கருத்துகளையோ, காணொளிகளையோ பதிவிடுவோர் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.








