கெடா மாநில குடிநுழைவுத் துறை நேற்று காலை கூலிம், பாடாங் மேஹாவில் உள்ள கட்டிட நிர்மாணத் தளத்தில் நடத்திய 'ஒப்ஸ் சாப்பு' அதிரடி சோதனையில் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
சுமார் 155 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின்போது, அதிகாரிகளைக் கண்ட அந்நிய நாட்டினர்கள் தப்பியோடி கட்டிடக் கூரைகளிலும் இயந்திரங்களுக்கு இடையிலும் பதுங்கினர். அவர்களைத் துரத்திப் பிடிக்க முயன்றபோது, குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்குக் கை முறிவு ஏற்பட்டது.
காயமடைந்த அதிகாரி உடனடியாக கூலிம் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக மாநில குடிநுழைவுத் துறை இயக்குனர் முகமாட் ரிட்சுவான் தெரிவித்தார்.
25 அதிகாரிகள் பங்கேற்ற இந்தச் சோதனையில், அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
















