இந்திய முஸ்லிம் உணவகங்களின் செயல்பாட்டுச் செலவுகள் 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் புகார் குறித்து விளக்கம் அளிக்க வருமாறு மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கமான PRESMA- விற்கு உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
உணவகச் செலவுகள் 10 முதல் 30 விழுக்காடு உயர்ந்துள்ளதாகக் கூறப்படும் புகாருக்குத் தகுந்த ஆதாரங்களையும் தரவுகளையும் சமர்ப்பிக்குமாறு துணை அமைச்சர் புசியா சாலே கேட்டுக்கொண்டுள்ளார்.
உணவுகளின் விலை உயர்வு என்பது உண்மையான செலவினங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்; லாப நோக்கத்திற்காகத் தன்னிச்சையாக விலையை உயர்த்தினால் 'விலைக்கட்டுப்பாடு மற்றும் லாபமீட்டல் தடுப்புச் சட்டம் 2011'-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
உலகளாவிய பொருளாதார அழுத்தம், விநியோகச் சங்கிலி பாதிப்பு மற்றும் மின்சாரம், எரிவாயு போன்ற பயன்பாட்டுக் கட்டணங்களின் உயர்வு காரணமாகவே இந்தச் செலவின அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரெஸ்மா தலைவர் முகமது மோசின் அப்துல் ரசாக் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.








