'கார்ப்பரேட் மாஃபியா' முறைகேடுகள் தொடர்பாகப் புகார் கூறப்பட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் எனத் தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் வலியுறுத்தியுள்ளார்.
கார்ப்பரேட் ஊழல் தொடர்பாக முன்னாள் பி.கே.ஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், இது அரசாங்கத்தின் நேர்மையைக் கேள்விக்குறியாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நெருக்கமானவர்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார்களுக்கு அரசாங்கம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என வான் சைபுல் கோரியுள்ளார்.
இந்த ஊழலில் முக்கிய நபராகக் கருதப்படும் விக்டர் சின் இருக்குமிடம் தங்களுக்குத் தெரியும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியிருந்தும், அவரை ஏன் இன்னும் நாட்டிற்குக் கொண்டு வரவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முறைகேடுகளில் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அரசு ஒப்பந்தங்களையும் விசாரணை முடியும் வரை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








