சிரம்பான், தாமான் துவாங்கு ஜப்பாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா தற்பொழுது ஆன்மீக எழுச்சியுடன் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இவ்விழாவின் உச்சக்கட்ட முக்கிய நிகழ்வாக வரும் ஜூலை 4 ஆம் தேதி சனிக்கிழமை, பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தும் பிரம்மாண்ட பால்குடத் திருவிழாவும், அதனைத் தொடர்ந்து கண்கொள்ளாக் காட்சியான சப்த இரத ஊர்வலமும் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளன.
இதற்கு முன்னோடியாக நடைபெற்ற வரும் சிறப்பு பூஜைகளில் நாளை ஜூலை 1 ஆம் தேதி புதன்கிழமை ஆலயத்தில் கோலாகல புஷ்பாஞ்சலி திருவிழா நடைபெறவுள்ளது. நாளைய தினம் காலையில் விசேஷ மற்றும் மகேஸ்வரர் பூஜைகளும், மாலை வேளையில் மஹா அபிஷேகம், கொடிமர அபிஷேகத்துடன் வண்ணமயமான மலர்களால் இறைவனைத் தொழுதேத்தும் புஷ்பாஞ்சலி வைபவமும் சிறப்பான முறையில் நடைபெறும்.
ஸ்ரீமத் சிவாகர தேசிக சுவாமிகள் அவர்களின் தூய ஆலோசனையின்படி நடைபெறும் இப்பெருவிழாவில், மலேசிய மெய்யன்பர்கள் அனைவரும் குடும்ப சகிதமாகத் திரளாகக் கலந்துகொண்டு இறைவருள் பெறுமாறு ஆலய நிருவாகத்தினர் பக்திப் பெருக்குடன் அழைக்கின்றனர்.










