நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் சுங்கை பாலாங் தொகுதியில் பி.கே.ஆர் சார்பில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார் ஐனா சொரயா பாதருடின்.
பி.கே.ஆர் கட்சியின் ஸ்ரீகண்டி பிரிவின் தேசியத் துணைத் தலைவரான இவர், சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கடல்சார் பொறியியல் பட்டதாரி ஆவார். கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய்-எரிவாயு துறைகளில் இவருக்கு இருக்கும் விரிவான தொழில்முறை அனுபவத்தால், உள்ளூர் மக்களிடையே ‘அக்கா கப்பல்’ என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
அண்மையில் இப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பக்காத்தான் ஹரப்பான் தகவல் தொடர்பு இயக்குநரும், தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், "பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எப்போதும் இளைஞர்களின் குரலுக்கு மதிப்பளிக்கிறது. அதற்குச் சான்றாகவே, சிறந்த தகுதியும் தொழில்முறை பின்னணியும் கொண்ட ஐனா சொரயா போன்ற துடிப்பான இளம் தலைவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தியுள்ளோம்" என்று பாராட்டியுள்ளார்.
மேலும், இத்தொகுதியில் நிலவும் பலவீனமான இணையச் சேவைப் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
தனது கடல்சார் பொறியியல் அறிவைக் கொண்டு, பாரிட் ஜாவா மற்றும் பந்தாய் லேகா ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடித் தொழிலை நவீனமயமாக்கப் போவதாக ஐனா சொரயா தெரிவித்துள்ளார். படகுத் துறைகளை மேம்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், பெண்களுக்குத் தொழிற்பயிற்சிகள் வழங்குதல் மற்றும் இளைஞர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் சுங்கை பாலாங் தொகுதியை ஒரு சிறந்த பொருளாதார மையமாக மாற்றுவதே தனது இலக்கு என ஐனா சொரயா பிரகடனப்படுத்தியுள்ளார்.








