நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், குலாய் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புக்கிட் பெர்மாய் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் இளம் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி, தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஒற்றுமை மற்றும் சேவை குறித்த முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகளில் தோல்வியடைந்த போதிலும், கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரும் தொடர்புத்துறை துணை அமைச்சருமான தியோ நீ சிங் அவர்களின் ஆதரவோடு, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் உள்ள பதிவுசெய்யப்பட்ட பொது இயக்கங்கள் மற்றும் ஆலயங்களுக்கு 3 லட்சம் ரிங்கிட் நிதியுதவியும், 4 தமிழ்ப்பள்ளிகளுக்கு 5 லட்சம் நிதியுதவியும் வழங்கித் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறார். தமக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டால், புக்கிட் பெர்மாய் தொகுதியில் உள்ள இந்தியச் சமூகத்தினருக்கு இன்னும் கூடுதலான உதவிகளைச் செய்ய முழு அர்ப்பணிப்புடன் இருப்பதாக முகமது ஷஃப்வான் அனி உறுதியளித்துள்ளார்.
"எந்தக் கட்சியாக இருந்தாலும், அரசியல் என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்கே தவிர, இனங்களுக்கிடையேயான உறவுகளைப் பிளவுபடுத்தும் கருவி அல்ல" என்று வலியுறுத்தியுள்ள முகமது ஷஃப்வான் அனி, நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கும் புதியதொரு நம்பிக்கைக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில், வாக்காளர்கள் அனைவரும் திரளாக வந்து தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.













