சொந்தத் தாயார் மற்றும் வளர்ப்புத் தந்தையாலேயே கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டதாக நம்பப்படும் 8 வயது இந்தியச் சிறுமி தாவிதா என்கிற அச்சிக்கா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைப்பிங், சுங்கை மாஸ் பகுதியில் தனது தாயார் மற்றும் வளர்ப்புத் தந்தையுடன் வசித்து வந்த அச்சிறுமி, கடந்த சில மாதங்களாகவே தொடர் சித்ரவதைக்கு ஆளாகி வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 26-ஆம் தேதி மதியம் 1.12 மணியளவில் தைப்பிங் மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்தார். மர நாற்காலியால் தலையில் தாக்கப்பட்டதாலும், கழுத்து எலும்பு முறிக்கப்பட்டதாலும் சுயநினைவை இழந்த சிறுமி சிகிச்சை பலனின்றி மாண்டார்.
சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததோடு, கைகள் மற்றும் கால்களில் ஏற்கனவே ஏற்பட்ட பழைய எலும்பு முறிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாகச் சிறுமியின் 26 வயது சொந்தத் தாயார், 27 வயது மூன்றாவது வளர்ப்புத் தந்தை மற்றும் வளர்ப்புத் தந்தையின் பெற்றோர் என மொத்தம் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பதை தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏஎஸ்.பி. அப்துல் மாலிக் இஸ்மாயில் உறுதிப்படுத்தினார்.
பாதுகாக்க வேண்டியவர்களே ஒரு பிஞ்சு உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் கொலை குற்றச்சாட்டான குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.








