கல்லூரி ஒன்றின் விரிவுரையாளரான தனது மனைவியை சந்தேகத்தின் பேரில் எடை தூக்கும் டம்பெல் – லினால் அடித்துக் கொன்றதாக சுயத் தொழில் செய்து வரும் நபர் ஒருவர், இன்று ஷா ஆலம், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இசாட் சாட் என்ற 38 வயதுடைய அந்த நபர், மாஜிஸ்திரேட் ஃபாரா ரொஸ்னான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் ஷா ஆலம், சுங்ஙாய் சொங்காக் என்ற இடத்தில் உள்ள வீட்டில் 44 வயதுடைய தனது மனைவி நுருல் குரைசியா சுல்கஃப்லி என்பவரை இரும்பினால் அடித்துக் கொன்றதாக அந்த ஆடவருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சரவா, கூச்சிங்கில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த அந்தப் பெண்மணி மைத்துனனின் திருமணத்திற்காக வீடு திரும்பிய போது, அவர் அடித்து கொல்லப்பட்டதாக பத்திரிகை தகவல்கள் கூறுகின்றன.








