கடந்த ஆண்டு மலாக்கா, டுரியான் துங்காலில் துங்கலில் மூன்று நபர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மரண விசாரணை நடத்தப்படும் என்று சட்டத்துறை தலைவர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.
கடந்த 2025 நவம்பர் 24 அன்று டுரியான் துங்காலில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் போலீஸ் நடவடிக்கையின் போது 24 முதல் 29 வயதுடைய மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட முயன்றதாகவும், அரிவாளால் தாக்கியதால் தற்காப்புக்காக சுட்டதாகவும் போலீசார் கூறினர். ஆனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து, முறையான விசாரணை கோரினர்.
போலீஸ் விசாரணை அறிக்கைகளை ஆய்வு செய்த சட்டத்துறை தலைவர் அலுவலகம், மரணத்திற்கான உண்மையான காரணங்களையும், இதில் ஏதேனும் குற்றவியல் கூறுகள் உள்ளதா என்பதையும் கண்டறிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இந்த மரண விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சட்ட நடைமுறை நியாயமாகவும், சுதந்திரமாகவும், சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டும் நடத்தப்படும் என்றும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் உறுதி அளித்துள்ளது.








