மலேசிய வரலாற்றிலேயே முதல் முறையாக, முன்னாள் பிரதமரின் துணைவியார் ஒருவர் திவால் நிலையைச் சந்திக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது!
லெபனான் நகை நிறுவனம் வழங்கிய 43 ஆடம்பர நகைகளைத் திருப்பித் தராத வழக்கில், டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் 6 கோடியே 75 லட்சம் ரிங்கிட்டை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து அந்த லெபனான் நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர் டத்தோ டேவிட் குருபாதம் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுப்படி ரோஸ்மாவிடமிருந்து ஒவ்வொரு காசையும் மீட்போம் என்றும், சொத்து பறிமுதல் போன்ற நடவடிக்கைகள் தோல்வியடைந்தால் இறுதி முயற்சியாக ரோஸ்மாவை திவால் ஆக்க சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் எச்சரித்துள்ளார்.
பல கோடி ரிங்கிட் சொத்துக்களுடன் ஆடம்பரமாக வாழ்ந்த ஒரு முன்னாள் பிரதமரின் துணைவியார் திவாலாகும் அபாயத்திற்கு தள்ளப்படுவது மலேசிய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அதேவேளையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ரோஸ்மாவின் தரப்பு தெரிவித்துள்ளது.








