பினாங்கு, நவ. 13-
தனது காதலை ஏற்க மறுத்ததால் ஒரு பெண்ணையும், அவரின் தந்தையையும் கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படும் தொழிற்சாலை பணியாளர் ஒருவர் மீது இரு கொலைக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த வாரம் வியாழக்கிழமை ஜார்ஜ்டவுன், ஆயர் ஹீத்தாமில் உள்ள ஒரு அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் இரட்டைக்கொலையை புரிந்ததாக 32 வயதுடைய முகமட் பார்ஹான் ரோஸ்மான் என்பவர் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
சம்பவத்தன்று இருவரை கொலை செய்தப்பின்னர் கத்தியால் தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டதாக கூறப்படும் அந்த தொழிற்சாலை பணியாளர், பினாங்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகிறார்.
அந்த நபரால் நடக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டதால் மருத்துமனைக்கு மாஜிஸ்திரேட் நாட்ரதுன் நாயிம் முகமட் சைடி வரவழைக்கப்பட்டு, அவரின் முன்னிலையில் அந்த தொழிற்சாலை பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
62 வயது சுல்கிப்ளி இப்ராஹிம் மற்றும் அவரின் 30 வயது மகள் சுலைஹா சுல்கிப்ளி ஆகிய இருவரை கொலை செய்ததாக குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நபர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.








