கோலாலம்பூர், டிச.3-
சுவிட்ஸ்சர்லாந்தில் காலமான மலேசியாவின் பிரபல தொழில் அதிபரும், கோடீஸ்வருமான டான்ஸ்ரீ டி. ஆனந்தகிருஷ்ணனின் நல்லுடக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் பெர்ஹாவில் உள்ள அவரின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கியது.
முன்னதாக, டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் நல்லடலை தாங்கிய பொன்னிறத்திலான பிரேதப் பெட்டி, பிரத்தியேக வாகனத்தில் அவரின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்களும் முதலில் அனுமதிக்கப்பட்டனர் பின்னர் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆனந்த கிருஷ்ணனின் நல்லுடல் சுவிட்ஸ்சர்லாந்திலிருந்து இன்று காலையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
ஆனந்த கிருஷ்ணன் உடலை கொண்டு வரும் போது அவரின் மூன்று பிள்ளைகளில் ஒரே மகனான புத்தபிக்கு வேன் அஜா சிரிபன்யோ, கோலாலம்பூர் விமான நிலையத்தில் காணப்ப்டடார்.
கடந்த நவம்பர் 28 ஆம் தேதி ஆனந்த கிருஷ்ணன் தமது 89 வயதில் சுவிட்ஸ்சர்லாந்தில் ஆல்ப்ஸில் உள்ள பண்ணை வீட்டில் காலமானார். அவரின் நல்லுடல் நாளை புதன்கிழமை கோலாலம்பூல், லொக் யூ இந்து மின்சுடலையில் தகனம் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வரும் பொது மக்கள், மலர்களோ, பூமாலைகளோ கொண்டு வர வேண்டாம் என்று குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.








