கோலாலம்பூர், பிப்ரவரி.18-
மலேசிய சட்டத்துறையை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியவரும், பொறுமை மற்றும் அர்ப்பணிப்புமிக்க நீதிபதியுமான ஷேக் தாவூத் இஸ்மாயில் மறைவிற்கு மலேசிய வழக்கறிஞர் மன்றம் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் தங்களது அஞ்சலியைச் செலுத்தியுள்ளனர்.
வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் எஸ்ரி அப்துல் வஹாப் கூறுகையில், முன்னாள் மூத்த நீதிபதியின் மறைவு தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்தார். "சட்ட மற்றும் நீதித்துறையில் அவர் ஆற்றிய நீண்ட கால சேவை, குறிப்பாக மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டது, நீதியை நிலைநாட்டவும் மலேசிய சட்டவியலின் வளர்ச்சிக்கும் அவர் காட்டிய அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது," என்று அவர் FMT தளத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
90 வயதான ஷேக் தாவூத், நுரையீரல் தொற்று காரணமாக இன்று காலை கோலாலம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மூத்த வழக்கறிஞர் Bastian Pius Vendargon, அவரை ஒரு 'கண்ணியமிக்க அறிஞர்' என்று வர்ணித்தார். குவாந்தான் உயர் நீதிமன்றத்தில் அவர் பணியாற்றிய போது காட்டிய பொறுமை, ஞானம் மற்றும் மரியாதையான அணுகுமுறை ஆகியவை ஒவ்வொரு வழக்கிலும் நீதியை நிலைநாட்ட உதவியதாக அவர் நினைவு கூர்ந்தார்.
மற்றொரு மூத்த வழக்கறிஞரான பி.எஸ். ரஞ்சன், ஷேக் தாவூத் அவர்களை ஒரு சிறந்த நீதிபதி என்றும், "நாம் அடையத் தவறிய ஒரு தலைமை நீதிபதி" என்றும் புகழ்ந்தார். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அரசு வழக்கறிஞராக அவர் வாதிட்ட திறமையைக் கண்டு தான் வியந்ததாக ரஞ்சன் குறிப்பிட்டார்.








