புத்ராஜெயா, ஜனவரி.20-
மலேசியாவில் உள்ள சமயப் பள்ளிகள், பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்துக் கல்விக் கழகங்களிலும், மலேசிய மாணவர்கள் அனைவருக்கும் தேசியக் பாடத் திட்டத்தின்படி மலாய்மொழி மற்றும் வரலாறு ஆகிய பாடங்களைக் கற்பிப்பது இனி கட்டாயமாக்கப்படுவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்தப் புதிய கொள்கை தனியார் பள்ளிகள் மற்றும் சீன உயர்நிலைப் பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழான UEC- யை வழங்கும் கல்விக் கழகங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
இப்பாடங்கள் கூடுதல் வகுப்புகளாக இல்லாமல், அதிகாரப்பூர்வ பள்ளி நேரத்திலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று புத்ராஜெயாவில் தொடங்கப்பட்ட 'தேசிய கல்வித் திட்டம் 2026-2035'-ன் ஒரு பகுதியாக, மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்தவும், தேசிய அடையாளத்தை வலுப்படுத்தவும் இந்தச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பிரதமர் சுட்டிக் காட்டினார்.
இதன் தொடர்ச்சியாக, 2027 முதல் படிவம் 3 மாணவர்களுக்கு மலாய்மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களில் புதிய மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை, கல்வி முறையில் ஒருமைப்பாட்டைக் கொண்டு வருவதோடு, அனைத்து மலேசிய மாணவர்களும் நாட்டின் அடிப்படை வரலாறு மற்றும் தேசியமொழியில் புலமை பெறுவதை உறுதிச் செய்யும் என்று பிரதமர் தெரிவித்தார்.








