மலாக்காவில் உள்ள எண்ணெய் நிலையம் ஒன்று, அரசாங்க உதவித் தொகைக்குரிய பெட்ரோல் ரோன் 95 எண்ணெய்யை அண்டை நாடு ஒன்றின் பதிவு எண்ணைக் கொண்டுள்ள வாகனத்திற்கு விற்பனை செய்த குற்றத்திற்காக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மலாக்கா, மஸ்ஜிட் தானா-வில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் அண்டை நாட்டுப் பதிவு எண்ணைக் கொண்ட டொயோட்டா ப்ரியஸ் வாகனத்திற்கு உதவித் தொகைக்குரிய பெட்ரோல் ரோன் 95 ரக எண்ணெய் நிரப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து மலேசிய மக்களுக்கு சலுகை விலையில் விற்க வேண்டிய பெட்ரோல் ரோன் 95 எண்ணெய், அந்நியருக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக மேற்கண்ட அமைச்சின் மலாக்கா மாநில இயக்குநர் நோரேனா ஜாபர் தெரிவித்தார்.
அந்த எண்ணெய் நிலைய உரிமையாளர் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டால் அவருக்கு பத்து லட்சம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.








