லங்காவி, குவா பகுதியில் பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்த 'டயமண்ட் டி.ஏ-40' என்ற சிறிய ரக விமானம் இன்று காலை அவசரமாக தரை இறங்கியதில், அதிலிருந்த இருவர் காயமின்றி உயிர் தப்பினர்.
விமானமோட்டும் பயிற்றுவிப்பாளர் முகமட் ஹஃபீஸ் இஸ்கந்தர் மற்றும் பெண் பயிற்சிப் பணியாளர் ஷா இசாத்தி மைசாரா ஆகிய இருவருமே பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். லங்காவி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து காலை 9.54க்குப் புறப்பட்ட இந்த விமானம், 10.20 மணியளவில் எஞ்சின் கோளாறை எதிர்நோக்கியது.
இதையடுத்து, விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வழங்கப்பட்டு, காலை 10.27 மணிக்கு லங்காவி ஸ்டேடியத்தின் திறந்தவெளி மைதானத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதில் விமானத்தின் முன்பக்க சக்கரம் சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள விமான விபத்து விசாரணை வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.








