ஜித்ரா, நவம்பர்.09-
அண்மையில், ஜெர்லுன், கம்போங் பீடா 3 வயல்வெளியில் தனது மைத்துனரின் தலை துண்டாகும் அளவிற்கு வெட்டிக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக நாளை ஜித்ரா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது. 38 வயதான இந்தச் சந்தேக நபர், இக்கொலைச் சம்பவம் நடந்த அக்டோபர் 31ஆம் தேதி கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்காகத் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்ததாக குபாங் பாசு காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ராட்ஸி அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
ஐந்து மாதங்களாகத் தனது மனநல சிகிச்சையைத் தவிர்த்து வந்த அந்த நபர், கொலை நடந்த இடத்தில் இருந்து 30 மீட்டர் தொலைவில், கையில் மண்வெட்டியுடன் பிடிபட்டதாக காவற்படையினர் தெரிவித்தனர். இந்தக் கொடூரமான கொலை தொடர்பாக, அந்த நபர் மீது மலேசியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302இன் கீழ் குற்றம் சுமத்தப்படவுள்ளது.








