ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தமது 5 வயது மகனை கொன்று, சடலத்தை செம்பனைத் தோட்டத்தில் தூக்கி எறிந்த குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மாதுவும்,, அவரின் காதலனும் இன்று தூக்குத் தண்டனையிலிருந்து தப்பினர்.
அந்த இரு காதல் ஜோடிக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்த புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம், இருவருக்கும் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக தீர்ப்பு அளித்தது.
39 வயது தி. காயத்ரி மற்றும் அவரின் காதலனான 33 வயது ஆர். சரவணகுமார் ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட இந்த 30 ஆண்டு சிறைத் தண்டனை அவர்கள் பிடிப்பட்ட தினத்திலிருந்து அமலுக்கு வருகிறது என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி வசீர் ஆலம் மைதீன் மீரா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
தவிர காயத்ரியுடன் கூட்டாக சேர்ந்து இந்த கொடூர குற்றத்தை புரிந்த சரவணனுக்கு 12 பிரம்படித் தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
காயத்ரியும், அவரின் காதலன் சரவணகுமாரும் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கெடா, கூலிம், தாமான் கெளடியில் உள்ள தங்கள் வீட்டில் 5 வயது எஸ். கவியரசன் என்ற சிறுவனை கொலைசெய்த குற்றத்திற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி அவ்விருவருக்கும் அலோர்ஸ்டார் உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.
எனினும் தூக்குத் தண்டனை தற்போது அகற்றப்பட்டுள்ளதால் அவர்களின் மேல்முறையீட்டை ஏற்ற அப்பீல் நீதிமன்றம் இருவருக்கும் 30 ஆண்டு சிறைத் தண்டனையை விதிப்பதாக தீர்ப்பு அளித்தது.








