மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம்பி (KTMB) நிறுவனம் தனது EMUPlus ரயில் சேவையை கிள்ளான் வரை விரிவாக்கம் செய்துள்ளதன் மூலம், கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் வசிப்பவர்கள் இனி ஈப்போவிற்கு நேரடியாகவும் வசதியாகவும் பயணம் செய்ய முடியும்.
கிள்ளான், ஷா ஆலம் மற்றும் சுபாங் ஜெயா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஈப்போ செல்வதற்கு இனி கேஎல் சென்ட்ரல் போன்ற முக்கிய நிலையங்களை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, இந்தச் சேவை கிள்ளானில் தொடங்கி, ஷா ஆலம், சுபாங் ஜெயா, KL சென்ட்ரல் வழியாக நேராக ஈப்போ வரை செல்லும் என்று கேடிஎம்பி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்லான் ஷா அல் பக்ரி தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாட்கள், நீண்ட விடுமுறை காலங்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் மட்டும் இயக்கப்படவுள்ள இந்த ரயிலுக்கான ஒரு வழிப் பயணக் கட்டணம் 45 ரிங்கிட்டில் இருந்து தொடங்குகிறது. வழக்கமான இடிஎஸ் (ETS) ரயில் சேவைகளுக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், அதிக கிராக்கி உள்ள காலங்களில் இயக்கப்படும். இந்த EMUPlus சேவைக்கான டிக்கெட்டுகளை பயணிகள் KITS Style செயலி அல்லது கேடிஎம்பியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம்.








