நியூசிலாந்தில் உயர் கல்வி மற்றும் குடியுரிமை பெற்றுத் தருவதாகக் கூறி, பெண் ஒருவரிடம் ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் மோசடி செய்த பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
'ஸ்ரீமதி' என்ற போலிப் பெயரில் பழகி, ஆசை வார்த்தைகளைக் கூறி இந்த மோசடியைச் செய்ததாக 50 வயதுடைய வெண்மணி ஆறுமுகம் என்ற உள்ளூர் பெண்மணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2024 பிப்ரவரி மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பழகிய இவர், நியூசிலாந்து குடியுரிமைக்கான கட்டணம் எனக் கூறி, கடந்த 2025 ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் 8 முறை வங்கிப் பரிமாற்றம் மற்றும் ரொக்கமாக மொத்தம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 550 ரிங்கிட்டைப் பெற்றுள்ளார்.
அதுமட்டுமன்றி, 3,000 ரிங்கிட் மதிப்புள்ள தங்கச் சங்கிலி ஒன்றையும் வாங்கியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் அழைப்புகளையும் அவர் துண்டித்துள்ளார். இதுகுறித்த புகாரைத் தொடர்ந்து, சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டமான அம்லாவின் கீழ் 3 குற்றச்சாட்டுகளை வெண்மணி நாளை காலை 8 மணிக்கு ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவிருக்கிறார்.









