ஈப்போ, கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் பேராக் மாநிலத் தமிழர் திருநாள் இயக்கத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன், விழாவிற்காக 30,000 வெள்ளி மானியத்தை வழங்கினார்.
அப்போது பேசிய டத்தோ சிவநேசன், பேரா மாநிலத்தில் ஒரு மாணவர் பயிலும் தமிழ்ப்பள்ளியாக இருந்தாலும் அது மூடப்படாது என உறுதி அளித்ததுடன், மொழி மற்றும் கலை கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் தமது உரையில் வலியுறுத்தினார்.
இவ்விழாவில், பத்திரிகை துறையில் 50 ஆண்டுகளைக் கடந்த 'மக்கள் ஓசை' நாளிதழின் தலைமை ஆசிரியர் பி.ஆர். ராஜன் அவர்களுக்கு, எழுத்துலக ஜாம்பவான் ஆதி.குமணன் பெயரிலான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. மேலும், கவிஞர் பெ.கா. நாராயணன், இரத்தின. மனோகரன் மற்றும் நா. புருசோத்தமன் ஆகியோருக்குத் 'தக்கார் விருதுகள்' வழங்கப்பட்டன.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. திரளான தமிழ்ப்பற்றாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வை, கடந்த 28 ஆண்டுகளாகச் சிறப்பாக வழிநடத்தி வரும் வழக்கறிஞர் மதியழகன் தலைமையிலான குழுவினரை டத்தோ சிவநேசன் வெகுவாகப் பாராட்டினார்.










