ஈப்போ மற்றும் தாப்பா ஆகிய பகுதிகளில் பேராக் போலீசார் நடத்திய அதிரடிச் சோதனைகளில், கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த தம்பதியர் உட்பட ஏழு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. 22 முதல் 44 வயதுக்குட்பட்ட ஐந்து உள்ளூர் ஆண்களும் இரண்டு பெண்களும் இந்தச் சோதனையின்போது பிடிபட்டனர் என்று பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது அல்வி ஜைனல் ஆபிதீன் தெரிவித்துள்ளார்
இதில் சுமார் அரை மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ, எக்ஸ்டசி கெட்டமின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றுடன் மூன்று கார்கள் மற்றும் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், ஒட்டுமொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்பு 7 லட்சத்து 94 ஆயிரத்து 827 ரிங்கிட்டாகும் என்று டத்தோ முகமது அல்வி ஜைனல் ஆபிதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் முதல் தீவிரமாக இயங்கி வந்த இக்கும்பலால் சுமார் 23 ஆயிரத்து 332 போதைப் பித்தர்கள் சீரழிக்கப்படும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளது. பிடிபட்டவர்களில் இருவருக்கு போதைப்பொருள் சோதனை 'பாசிட்டிவ்' என வந்துள்ள நிலையில், இவர்களில் ஆறு பேருக்கு முந்தைய குற்றப் பின்னணிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று டத்தோ முகமது அல்வி ஜைனல் குறிப்பிட்டார்








