பினாங்கு, ஜூன் 18-
விரைவு பேருந்துடனான சாலை விபத்தில், புரோட்டான் ஜென்2 வாகனத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்த வேளை, மற்றொருவர் கடும் காயங்களுக்கு இலக்கானார்.
பினாங்கு, சுங்கை பக்காப்-புக்கு அருகாமையிலுள்ள வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 155.9ஆவது கிலோமீட்டரில் இன்று அதிகாலையில் அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
அதிகாலை மணி 4.36 அளவில் அவசர அழைப்பு கிடைத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த, சுங்கை பக்காப் தீயணைப்பு மீட்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள், வாகனத்தினுள் ஓட்டுநர் இருக்கையிலும் பயணிக்கான இருக்கையிலும் சிக்குண்ட 30 மற்றும் 40 வயதுடைய அவ்விரு ஆடவர்களை சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி வெளியே கொண்டு வந்தனர்.
அதில், 30 வயதுடைய ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ பணியாளர்கள் உறுதிபடுத்திய வேளை, சடலம் உடற்கூறு ஆய்வுக்காக, சுங்கை பக்காப் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
முகத்தில் காயத்திற்கு இலக்காகியிருந்த மற்றொரு நபர், சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பட்டதாக, பினாங்கு தீயணைப்பு துறை கூறியது.
இவ்வேளையில், அந்த விபத்தை உறுதிபடுத்திய போலீஸ், அது குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.








