ஷா ஆலாம், பிப்.27-
இலக்குக்குரிய பெட்ரோல் ரோன் 95 உதவித் தொகைத் திட்டம், இவ்வாண்டு மத்தியப் பகுதியில் அமல்படுத்தப்படலாம் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிஸான் முகமட் அலி கோடி காட்டியுள்ளார்.
குறைந்த விலையிலான பெட்ரோல் ரோன் 95 சலுகையை இலக்குக்குரிய மக்கள் மட்டுமே அனுபவிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான வியூகம், மத்தியப் பகுதியில் அமல்படுத்தப்படலாம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இதற்கான வியூகம், தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் வரைவு இறுதிக்கட்டத்தில் உள்ளது. அதன் பலாபலன் இலக்குக்குரிய மக்களை, சென்றடைவது எல்லா நிலைகளிலும் உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் இலக்குக்குரிய இந்த மானிய உதவித் திட்டம் அமலாக்கத்தினால் பொருட்கள் மற்றும் சேவைகளில் விலைகளில் அல்லது கட்டணங்களில் கட்டுப்பாடற்ற அதிகரிப்பை ஏற்படுத்தாது என்பதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிப்பதாக அவர் சொன்னார்.
முன்பு டீசல் மானிய இலக்கை செயல்படுத்தியபோது பயன்படுத்தப்பட்ட வழிமுறை, இலக்குக்குரிய பெட்ரோல் ரோன் 95 உ தவித் தொகைத் திட்டத்தில் சற்று மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் டத்தோ அர்மிஸான் விளக்கினார்.







