தேசிய இருதயக் கழகமான ஐஜேஎன்னில் சிகிச்சை பெற்று வரும் துணைப் பிரதமர் ஃபாடில்லா யுசோஃப் மற்றும் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும், அவரது மனைவி டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
கடந்த வாரம் ஃபாடில்லா யுசோஃப்பிற்கு இதய அறுவைச் சிகிச்சையும், கடந்த வெள்ளிக்கிழமை Ismail Sabri-க்கு இதயத் துடிப்பை சீராக்கும் கருவி பொருத்தும் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ஃபாடில்லா யுசோஃப் நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும், மேலும் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சொத்துப் பிரகடனம் தொடர்பான வழக்கில், இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அவர் தற்போது சிகிச்சையில் இருப்பதால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருவரும் விரைவில் குணமடைந்து, மக்களுக்கும் நாட்டுக்கும் தொடர்ந்து சேவையாற்ற தேவையான உடல்நலமும் வலிமையும் பெற வேண்டும் என தானும் டாக்டர் வான் அஸிஸாவும் பிரார்த்தனை செய்வதாக அன்வார் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.








